தில்லியில் ஜூன் 15ல் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் தில்லியில் வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மாநில திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க எந்தவித அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பயனில்லை என்று அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் ஒரு பயனற்ற அமைப்பு என்று அவர் குறிப்பிட்டிருப்பது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.




