ஆந்திரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் கடந்த மாதம் 30-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார். ஆனால், அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அமைச்சரவையில் யார், யாருக்கு இடம் அளிக்கலாம் என்பது குறித்து முக்கிய தலைவர்களுடன் ஜெகன் ஆலோசித்து வந்தார். அப்போது திடீரென நேற்று தனது அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் இடம்பெறுவர் என்று தெரிவித்தார்.
அதன்படி, எஸ்.சி, எஸ்.டி, பி.சி, சிறுபான்மையினர் மற்றும் காப்பு சமூகம் ஆகிய சமூகத்தில் இருந்து ஒருவர் என்று 5 பேர் துணை முதல்வர்களாக இன்று பதவியேற்றனர்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள 25 அமைச்சர்களுக்கும் ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இரண்டரை வருடத்துக்கு பின்னர் அமைச்சரவை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப் பட்ட நடிகை ரோஜா, நகரி தொகுதியில் வெற்றி பெற்றவர். அவர், ஜெகன் அமைச்சரவையில் இன்று பொறுப்பேற்பார் என்று கூஉறப் பட்டது. ஆனால், அவர் அமைச்சராக பதவி ஏற்கவில்லை! அதனால் அவருக்கு சபாநாயகராக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத் தலைநகர் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை முறைப்படி அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டு முதல்வராக பொறுப்பேற்றார் ஜெகன் மோகன் ரெட்டி. முன்னதாக அங்கு வைக்கப்பட்டுள்ள ஜெகனின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதை அடுத்து தலைமைச் செயலக அதிகாரிகள், ஊழியர்கள் வரிசையில் நின்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.