பிரதமர் மோதி தலைமையிலான அரசு இரண்டாவடு முறையாக பதவி ஏற்ற பின்னர் முதல் நிதி ஆயோக்கூட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு, விமானம் மூலம் தில்லி வந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்துள்ளனர்.
முன்னதாக இன்று காலை பிரதமர் மோதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி! அப்போது, தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்த 90 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அளித்தார். மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது, தமிழகத்திற்கான நிதி குறித்த கோரிக்கை மனுவையும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மதியம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இரவு 9.30க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
பிரதமராக 2ஆவது முறையாக மோதி பதவியேற்றபோது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று மோதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது மீண்டும் பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.