நாடு முழுவதும் காவல் துறையில் 5.28 லட்சம் பதவிகள் காலியாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…
நாடு முழுவதும் போலீஸ் படையில் 23,79,728 இடங்கள் உள்ளன. இவற்றில் கடந்த 2018 ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப் படி 18,51,332 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 5,28,396 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.
நாட்டின் மிகப் பெரிய மாநிலமாக உள்ள உ.பி., மாநிலத்தைப் பொறுத்தவரையில் 1,28,952 இடங்கள் காலியாக உள்ளன. தொடர்ந்து பீகாரில் 50,291, மேற்கு வங்கத்தில் 48,981, தெலங்கானாவில் 30,345 இடங்களும் காலியாக உள்ளன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 1,24,130 இடங்களில் சுமார் 22,420 இடங்கள் காலியாக உள்ளன.
ம.பி., யில் 22,355-ம், கர்நாடகாவில் 21,943, குஜராத்தில் 21,070 , ஜார்கண்ட்டில் 18,931, ராஜஸ்தானில் 18,003, ஆந்திராவில் 17,933, ஹரியானாவில் 16,844, சட்டீஸ்கரில் 11,916, ஓடிசாவில் 10,322 இடங்களும் காலியாக உள்ளன.
இந்த மாநிலங்களைத் தவிர நாகாலந்தில் மட்டும் விதிவிலக்காக அதிகளவிலான போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். இம் மாநிலத்தில் போலீஸ் படை பிரிவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 21,292 பணியிடங்களை காட்டிலும் சுமார் 940க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.



