பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் வினோத் குமார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரயிலில் சென்றுள்ளார்.
அப்போது பண்டாரக் பகுதியைச் சேர்ந்த சிலர் வினோத்தை கடத்தி கொண்டு சென்று ஒரு பெண்ணிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். இதற்கிடையில் வீடு திரும்பாத வினோத்தை தேடிகொண்டிருந்த அவரது சகோதரர் சஞ்சய்க்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஃபோன் செய்து, வினோத்திற்கு கட்டாய திருமணம் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.இதனால், சந்தேகமடைந்த சஞ்சய் காவல் துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடத்திய விசாரணையில், ஒரு கும்பல், வினோத்தை கடத்தி கொண்டு சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி ஒரு பெண்ணிற்கு தாலி கட்ட வைத்துள்ளது எனதெரியவந்தது. வினோத் கண்ணீர் மல்க தாலி கட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது. இது அறிந்து வினோத்தை காவல்துறையினர் மீட்டு வந்தனர்.
மேலும் திருமணம் செய்த பெண்ணை ஏற்றுக்கொள்ளுமாறும் வினோத்தின் குடும்பத்திற்கு அந்த கும்பலிடமிருந்து மிரட்டல்கள் வந்துள்ளன. இது குறித்து வினோத் காவல்துறையிடம் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். அப்புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் வினோத்துக்கு நடத்தப்பட்ட கட்டாய திருமணம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.