ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ பிரிவு இன்று நாடாளுமன்றத்தில் நீக்கப் பட்டது. இதை அடுத்து, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி மற்றும் ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 35ஏ, 370 ஆகியவை ரத்து செய்யப் பட்டு, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி, காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப் படும். காஷ்மீர் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசம் மற்றும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசம் என பிரிக்கப் படுகிறது.
இந்நிலையில், காஷ்மீரில் நிலவும் சூழலைக் கருதி, முன்பே காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா, மக்கள் தேசிய கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். மேலும், முன்னதாக அவர்கள் விடுத்த எச்சரிக்கையில், காஷ்மீரில் மத்திய அரசு ஏதாவது முடிவு எடுத்தால் போராட்டம் வெடிக்கும் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில், காஷ்மீரின் போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் முகமாக, வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த இருவரும் கைது செய்யப் பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர். மேலும் பல தலைவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.