
மதுரை கோவில் பாப்பாக்குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரும் பாரதி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இவர்களது திருமணத்தை இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தனியாக வசித்து வந்துள்ளனர்.
கார்த்திகேயன் மற்றும் பாரதி தம்பதியருக்கு சபா என்ற மனநிலை பாதிக்கப்பட்ட 13 வயது மகன் உள்ளார்.இவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பாரதி உடல் நிலை பாதிக்கப்பட்டு கை, கால் செயல் இழந்து படுத்த படுக்கை ஆனார். இதனால் குடும்பம் நிர்லைத் தடுமாறியது. மனநிலைக் குன்றிய மகன் மற்றும் ஏதும் செய்ய இயலாத மனைவி இருவருடனும் ஒருவராக கார்த்திகேயன் மிகுந்த துன்பப்பட்டிருக்கிறார்.

ஒருநாள் காவலாளி ஆசைத்தம்பி என்பவர் குடியிருப்பு பராமரிப்பு கட்டணம் வசூலிக்க சென்றுள்ளார். அப்பொழுது நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியே பார்த்துள்ளார். அப்போது கார்த்திகேயன் தூக்கில் தொங்கியிருப்பதை கண்டுள்ளார்.
உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது மூவரும் இறந்து கிடந்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வீட்டைச் சுற்றி சோதனை செய்ததில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது.
அக்கடிதத்தில் கார்த்திகேயன், என் மனைவி அதிகாலை 3 மணியளவில் உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் நானும், என் மகனும் தற்கொலை செய்து கொள்கிறோம் என எழுதியிருந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



