தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதை விநாயகர் சிலைக்கு வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புது முயற்சியாக விதை விநாயகர் சிலை விற்பனையை தமிழக தோட்டக்கலைத்துறை துவக்கியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்.2ம் தேதி கொண்டாடப்படுகிறது! இதை ஒட்டி வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுகின்றனர்.
கோவில்கள் மற்றும் பொது இடங்களில் பெரிய அளவில் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். வழிபாடு முடிந்ததும் இந்தச் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன! இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு தோட்டக்கலைத் துறையினர் புது முயற்சியாக விநாயகர் சிலை விற்பனையை தொடங்கியுள்ளனர்.
வெண்டைக்காய் மற்றும் கொத்தவரை உள்ளிட்ட விதைகளை வைத்து களிமண்ணால் விதை விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது. சிறு தொட்டிக்குள் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவற்றை வாங்கி சென்று பூஜை செய்த பிறகு தொட்டியில் நீரை ஊற்றி சிலையை கரைத்துவிடலாம்.
சிலையில் வைக்கப்பட்டுள்ள வெண்டைக்காய் மற்றும் கொத்தவரை போன்ற காய்கறி செடிகள் வளர்ந்து வீட்டுக்கும் பயன் தரும். புது முயற்சியாக தோட்டக்கலை துறையினர் விநாயகர் சிலைகளின் விற்பனையை தொடங்கி உள்ளனர்.
சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்கா சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குனர் அலுவலகம், தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா உள்ளிட்ட இடங்களில் இந்த சிலைகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, வீட்டுக்கு காய்கறி தரும் என்பதால் விதை விநாயகர் சிலைக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. எழிலகம் வளாகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இந்த சிலைகளை நேற்று ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹெச். ராஜா, இந்த விதை விநாயகர் சிலை விற்பனைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்
பசுமைப் பிள்ளையார்…