
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
இந்நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் ஈரப்பதத்தை காற்று ஈர்த்துச் செல்வதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது. நேற்றும், இன்றும் மழை இன்றி வெய்யில் அடித்தது.
இதே போன்று, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒடிசா நோக்கி சென்றதால் வட தமிழகத்திலும் வறண்ட வானிலையே காணப்படுகிறது.
இதுகுறித்து வானிலை மைய அதிகாரி கூறியபோது, அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறி நகர்ந்து சென்று விட்டதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது. 2 நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது.
அதே நேரம், வெப்பச்சலனம் காரணமாக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய வடமேற்கு மாவட்டங்களில் மட்டும் மழையை எதிர்பார்க்கலாம். வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. இதனால் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது… என்று கூறினார்.



