இன்றைய சூழல் குறித்து
திரு வெ.பொன்ராஜ்
அப்துல்கலாம் அறிவியல் ஆலோசகர்…………
செல்வி ஜெயலலிதாவின் ஒரே செல்வம் பன்னீர்செல்வம்
இன்றைக்கு தமிழக முதல்வர் திரு ஒ. பன்னீர் செல்வம் அவர்கள், கட்சி தலைமை கேட்டுக்கொண்டதின் பேரில், தன் பதவியை துறந்து ராஜினாமாவை செய்து விட்டு, துரோகத்தின் நிழல் கூட அவர் மீது படியாமல். இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் சமாதியில் மவுன அஞ்சலி செலுத்தி, ஒரு உண்மையை தனது மனக்குமுறலை முதல்வர் திரு ஒ. பன்னீர் செல்வம் அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்.
செல்வி ஜெயலலிதா அவர்கள் பெற்ற ஒரே செல்வம் பன்னீர் செல்வம்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த போது முதல்வர் பதவி வேண்டாம் என்று சொன்ன அவரை சூழ்நிலையை சாதகமாக்கி முதல்வராக்கினார்கள் என்றும், சக அமைச்சர்கள் தன்னை ராஜினாமா செய்ய சொன்னார்கள் என்றும், இப்போது அவரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்றும். தான் அவமானபடுத்தப்பட்டதாகவும், அவருக்கு தெரியாமல் தம்பிதுரை செயல்பட்டார் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட அவருக்கு தெரியாமல் கூட்டப்பட்டது என்றும், இந்த நிலையிலும், வர்தா புயல், சென்னைக்கு ஆந்திரா தண்ணீர், சல்லிகட்டு சட்டம் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட முதல்வராக, ஒரு எளிமையான முதல்வராக இருந்தவர் திரு ஒ.பன்னீர் செல்வம். இன்றைக்கு தனி ஒருவனாக போராட தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.
அவரது இன்றைய பேட்டிகள், மக்கள் மனநிலையையும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் மனநிலையையும் எதிரொலிக்கும் ஒத்த கருத்தாக இருக்கிறது. இதுநாள் வரையில் அடக்கி வைத்திருந்த அமைதியை துறந்து தன் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாளை என்ன நடக்கும், இது தான் மிகப்பெரும்பான்மையான அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களது எதிர்பார்ப்பு.
தமிழக மக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழக மக்கள் திரு ஒ. பன்னீர் செல்வத்தின் நிலையை ஆதரிக்கிறார்கள்.
அதிமுக கட்சி என்பது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட தமிழகத்தின் மிகப்பெரிய கட்சி. செல்வி ஜெயலலிதா அவர்களால் கடந்த பாராளுமன்ற தேர்தலிலும், மீண்டும் சட்ட மன்ற தேர்தலிலும் மிகப்பெறிய வெற்றியை தனித்து பெற்று, ஒரு சாதாரணமானவர்கள்கூட பதவிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய கட்சி.
இன்றைக்கு அதிமுகவின் பெரும்பான்மையான தொண்டர்கள் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்.
ஆனால் அதிமுக கட்சி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியை அடுத்த 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெற வைக்க வேண்டுமானால், இன்றைக்கு வாக்களித்த மக்களின் எண்ணங்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதிபலிக்க வேண்டும்.
அதிமுகவின் பெரும்பான்மையான தொண்டர்களின் மனசாட்சியை அறிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நடப்பீர்கள் என்றால், மக்களின் ஆதரவை தொடர்ந்து தக்க வைக்க வேண்டுமானால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திரு ஒ. பன்னீர் செல்வம் அவர்களை ஆதரிக்கவேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்களை திரு ஒ. பன்னீர் செல்வத்தை ஆதரிக்க வைக்க, அதிமுக தொண்டர்கள் நாளை களத்தில் இறங்கி, சட்டமன்ற உறுப்பினர்களை வலியுறுத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்றால், உடனடியாக அனைத்து உறுப்பினர்களும், திரு ஒ.பி.எஸ் அவர்களை ஆதரிக்க வேண்டும்.
இந்த இக்கட்டான சூழலுக்குப் பிறகும் நீங்கள், இந்த அருமையான வாய்ப்பை தவற விட்டீர்கள் என்றால், பிறகு அதிமுக கட்சி மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டி வரும்.
ஏனென்றால், திரு ஓ. பன்னீர்செல்வம் நன்றாக தானே ஆட்சி செய்கிறார் அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று திரு ம. நடராஜன் அவர்கள் சொல்லி சில நாட்களுக்குள் முதல்வர் திரு ஒ.பன்னீர்செல்வத்தை மாற்றி திருமதி வி.கே. சசிகலா அவர்களை முதல்வர் ஆக வேண்டிய அவசியம் என்ன???
இன்றைக்கு திருமதி வி.கே. சசிகலா அவர்கள் முன்பாக அதிமுகவின் ஆட்சியை காப்பதற்கும், அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும், இரண்டு சாத்தியக்கூறுகள் இருந்தது. அதை திருமதி வி.கே. சசிகலா அவர்கள் செய்திருந்தால் மக்கள் மத்தியில் அவர்களுடைய மதிப்பு உயர்ந்து இருக்கும்.
அதாவது விடுதலையான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வரும் வரை நான் முதல்வராக மாட்டேன் என்று திருமதி வி.கே. சசிகலா அவர்கள் சொல்லி இருந்தால் ஒரு படி உயர்ந்து இருப்பார் திருமதி வி.கே. சசிகலா அவர்கள்.
ஒரு வேளை தீர்ப்பு சாதகமாக வந்தால் கூட, வரும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் தீர்ப்பை பெற்றுத்தான், முதல்வராக வருவேன் என்று சொல்லி இருந்தால் திருமதி வி.கே. சசிகலா அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று இருப்பார்கள்.
மக்கள் மத்தியில் தேர்தலில் வெற்றி பெற்று வந்திருந்தால் அதை யாரும் தடை செய்து விட முடியாது.
இன்றைக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு வாரத்தில் வர இருக்கின்ற நிலையில், இப்படி உடனடியாக பதவியேற்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது.
அதிமுகவில் பெரும்பாலான தொண்டர்களின் மனநிலையும், மக்களின் மனநிலையும் திருமதி வி.கே. சசிகலா அவர்களுக்கு எதிராக இருக்கிறது என்று நீங்கள் கணிக்க வில்லையா.
நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற திரிசங்கு சொர்க்கத்தில், இது ஒன்று தான் வாய்ப்பு, முதல்வர் என்ற வரலாறு முக்கியம் என்று திருமதி வி.கே. சசிகலா அவர்கள் முடிவெடுத்து விட்டார்கள் என்று தான் தெரிகிறது.
ஆனால், மத்திய பி.ஜே.பி அரசு, அதன் ஆளுனர் அவர்கள் உச்சநீதி மன்ற தீர்ப்பை காரணம் காட்டி திருமதி வி.கே. சசிகலா அவர்களக்கு பதவி பிரமாணத்தை செய்து வைக்க தயங்கினார்கள் என்று தான் தெரிகிறது.
ஒரு முதல்வர் மிரட்டப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதால், ஆளுனர் அவர்கள் திரு ஒ.பி.எஸ் அவர்களது ராஜினாமவை ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது.
நாளைக்கு அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் கூடி திருமதி வி.கே. சசிகலா அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்து மீண்டும் திர்மானம் நிறைவேற்றினாலும், அதை ஆளுனர் அவர்கள் ஏற்க வேண்டும் என்ற நிலை இல்லை.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களையும் தனியே சந்தித்து அவர்கள் கருத்தை, மிரட்டப்படாமல் கையெழுத்தை போட்டிருக்கிறார்களா இல்லையா என்று நேரடியாக கேட்டு அறிந்துதான் அவர் ஒரு முடிவை எடுக்க முடியும்.
அதே நேரத்தில் ஆளுனர் அவர்கள் திரு ஒ.பி.எஸ் அவர்களை தன் பலத்தை சட்டமன்றத்தில் நீருபிக்க சொல்லவும் வாய்ப்பி
ருக்கிறது.
டெல்லி தகவல் ஒன்று சொல்கிறது, திரு ஒ. பன்னீர்செல்வத்திற்கு 65 சட்டமன்ற உறுப்பினர்களின் மறைமுக ஆதரவு இருக்கிறது என்று, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் நீருபிக்கப்படலாம், அது திமுகவின் ஆதரவோடு கூட நடக்கலாம். அப்படி நடந்தாலும் இந்த முறையில் அதிமுக ஆட்சி நீடிப்பது நிச்சயமில்லை.
எனவே, மத்திய அரசு இன்றைக்கு திரு ஒ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வரும் வரை, ஆளுநர் இன்னும் ஒரு வாரம் வரை இந்த சட்ட மன்ற உறுப்பினர்களை வைத்து நாடகத்தை அரங்கேற்ற வாய்ப்பு இருக்கிறது. அப்படி நிகழ்வுகள் அறங்கேறும் பட்சத்தில், ஒருவேளை தீர்ப்பு திருமதி வி.கே. சசிகலா அவர்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், அவர் முதல்வராக முடியாத நிலைமை ஏற்படும்.
அப்போது அதிமுக இன்னொரு முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஒரு வேளை தீர்ப்பு சாதகமாகினால் அவர் முதல்வராவது சாத்தியம். திருமதி வி.கே. சசிகலா அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் அவர் முதல்வராக தொடர்வது சாத்தியம். இல்லையென்றால் உடனடியாக திருமதி வி.கே. சசிகலா அவர்கள் ஆட்சி அமைத்தாலும், அதிமுக ஆட்சி நீடிப்பது நிச்சயமில்லை.
ஆனால் இன்றைக்கு செல்வி ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெற்ற அதிமுக ஆட்சி தொடரவேண்டுமென்றால், திருமதி வி.கே. சசிகலா அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். அதன் பின்பு, அனைத்து அதிமுகவின் உறுப்பினர்களின் வாக்கைப்பெற்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, மக்களின் தீர்ப்பை பெற்றால் அதிமுக ஆட்சி திருமதி வி.கே. சசிகலா அவர்கள் தலைமையில் தொடரும்.
அதுவரை, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக திரு ஒ. பன்னீர் செல்வத்தை ஆதரித்தால் தான் அதிமுக ஆட்சி தொடரும்.
இந்த முடிவை அதிமுக உறுப்பினர்கள் எடுத்து திரு ஒ. பன்னீர் செல்வத்தை ஆதரித்தால், அதிமுக ஆட்சி தொடர வாய்ப்பிருக்கிறது. அதை தான் மக்களும், அதிமுகவின் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாளை காலை விடிந்ததும் சிந்தித்து செயல்படுங்கள். நீங்கள் சிந்தித்து செயல்பட்டால், கண்டிப்பாக மீதம் உள்ள 4 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி உறுதி.
இல்லையென்றால், அடுத்த 6 மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி ஆட்சி வர வாய்ப்பிருக்கிறது, அதற்கு பின் தேர்தல் வரவாய்ப்பிருக்கிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய அதிமுகவை, செல்வி ஜெயலலிதா அவர்கள் இராணுவம் போல் கட்டிக்காத்து, மிகப்பெரிய சவாலான சூழ்நிலைகளை எல்லாம் சமாளித்து, வெற்றி மேல் வெற்றி பெற்று அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கான வாய்ப்பையும் உருவாக்கி விட்டு, அவர்கள் மறைந்து விட்டார்கள்.
அவர் ஒரு ஊழலற்ற ஆட்சியை தரவில்லை என்றாலும், ஒரு தொலை நோக்கு பார்வையை செயல்படுத்த இயலாத ஆட்சியைத்தான் தந்தார் என்றாலும் கூட சாதாரண மக்களுக்கான சமூக நல திட்டங்களையும், சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து, ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியை கொடுத்தார் என்பதில் மாற்றம் இல்லை. அப்படிப்பட்ட ஆட்சியை கலைத்து விடும் நடவடிக்கையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக்கூடாது. அவர்கள் சிந்திக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஒரு சட்டமன்ற கூட்டத்தொடரில் எனக்கு பின்னாலும், அதிமுக ஆட்சி 100 வருடத்திற்கு இருக்கும் என்று அனைத்து கட்சிகளுக்கும் சவால் விட்டு ஆட்சி நடத்தியவர் செல்வி ஜெயலலிதா, அவர் ஏற்படுத்தி கொடுத்த ஆட்சியை, மக்களின் மனநிலை அறியாமல் செயல்பட்டு, அடிதட்டு அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை அறியாமல் செயல்பட்டு, அப்படிப்பட்ட ஆட்சியை குறைந்த பட்சம் தொடர்ந்து நடத்த இயலாமல், அவரது எண்ணப்படி அவர் காட்டிய பாதையில், அவர் யாரை காண்பித்தாரோ, அவரை முதல்வராக தொடர விட்டு, மக்களின் நம்பிக்கையை பெற்று வரும் தேர்தலில் தங்களது தலைமைப்பண்புகளை நீருபித்து அதிமுகவை வளர்க்க வேண்டுமேயொழிய, இப்படி பட்ட முடிவுகளை மக்களின் வாக்குக்கு மாறாக, ஜெயலலிதா அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, எண்ணத்திற்கு மாறாக திணிக்க கூடாது.
எனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும், அவ்வாறு ஒரு நல்ல முடிவை எடுக்கும் வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், உங்களது நீண்ட கால அரசியல் பணிகளை மனதில் வைத்து, சிந்தித்து செயல்படுங்கள். எனவே நன்றாக சிந்தியுங்கள்.
தற்போதைய முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்தை நீங்கள் ஆதரித்தால் அதிமுக ஆட்சி தொடரும் அதிமுகவினர் மிகவும் மகிழ்ச்சியடையலாம்.
இல்லை யென்றால் ஜனாதிபதி ஆட்சி வரும், தேர்தல் வரும் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் உங்கள் முடிவு மக்களுக்கு சாதகமான, மக்கள் உணர்வுகளை, மக்களது வாக்கை மதிக்கும் வகையிலான, முடிவாக இருக்க வேண்டும்.
வெ. பொன்ராஜ்


