செங்கோட்டை அருள்மிகு தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாத சுவாமி கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரநாத சுவாமி சமேத தர்மசம்வர்த்தினி கோயில் தைப் பூசத் திருவிழா கடந்த 31-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுவாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், ஆராதனை நடந்தன. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, முக்கிய
நிகழ்வுகளில் ஒன்றாக, 9-ஆம் திருநாளான இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


