கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள பல்லுர்தி – கும்பளாங்கி பகுதியை சேர்ந்த சிறுவன் ஆரவ்.. இங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.. பல்லுர்தி முதல் கும்பளாங்கி வரை தன்னுடைய ஸ்கூலுக்கு ஆட்டோவில்தான் சென்று வருகிறான்.
ஆனால் இவன் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ரோடுகள் பள்ளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.. இந்த பள்ளத்தில்தான் ஆட்டோ ஏறி இறங்கி செல்கிறது.. இதனால் எந்தநேரமும் கீழே விழுந்துவிடுவோமோ என்ற பயத்திலேயே இவன் இருந்துள்ளதாக தெரிகிறது.
மேலும், சாலைக்கு அருகிலேயே இவனது வீடும் உள்ளதால், எந்த பெரிய வண்டிகள் போனாலும் அதன் அதிர்வு வீட்டிற்குள் கேட்டு, இரவு நேரங்களில் பயந்தபடியே இருந்திருக்கிறான்.. இதை பற்றி பலமுறை புகார் சொல்லியும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் சிறுவன் நேரிடையாகவே சாலை வசதி கோரி உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு கடிதம் எழுதிவிட்டான்.
அதில், “நிறைய பள்ளங்கள் உள்ள ரோட்டில் ஆட்டோவில் போகவே பயமாக இருக்கிறது.
ஒவ்வொருமுறையும் பள்ளங்களில் ஆட்டோ விழும்போதும் தலைகீழாக கவிழ்ந்து விடுவதுபோல் எனக்கு தோன்றுகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அதற்காகத்தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் ஜட்ஜ் அங்கிள்” என்று தெரிவித்துள்ளான்.
ஆரவ் எழுதிய இந்த கடிதத்தை அவனது அம்மா நீதிபதிக்கு அனுப்பியுள்ளார். நீதிபதியும், ஆரவ்-வின் கடிதத்திற்கு மதிப்பளித்து நடவடிக்கையும் எடுத்துள்ளார்..
ஆரவ் புகார் சொன்ன சாலைகளில் அதிகாரிகள் வெறும் 3 நாளில் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆரவ்.. இப்படி பொதுநல விஷயங்களில் ஈடுபடுவது இது முதல் முறை கிடையாது..
ரோட்டில் குவிந்துகிடந்த குப்பைகளை தன்னுடைய அப்பாவின் செல்போனில் வீடியோ எடுத்து அதை பிரதமரின் செயலிக்கும் அனுப்பி வைத்தவன்.. அதேபோல, ரோட்டில் யார் நின்று சிகரெட் பிடித்தாலும் அவர்களிடம் போய் நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்டுவிடுவானாம்..
சிறுவனுக்கு உள்ள பொதுநல அக்கறையும் அதன் அடிப்படையில் எடுக்கும் நடவடிக்கையும் பாராட்டலுக்கு உள்ளாகியுள்ளது.