லக்னோ: பெருந்தன்மையுடன் முதல்வர் அரியணையில் வைத்து அழகு பார்த்த தந்தைக்கு துரோகம் செய்ததை அவர் மன்னிக்கலாம். மக்கள் தண்டிக்காமல் விடுவார்களா என்ன? இந்த உண்மை பாடத்தை உத்திரபிரதேச மக்கள் கற்பித்துள்ளனர்.
கடந்த 2012 ல் நடந்த சட்டசபை தேர்தலில் முலாயம்சிங்கின் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெருவாரியான வெற்றியை கண்டது. முலாயம்சிங் முதல்வராகி இருக்கலாம். இருப்பினும் தனது மகனை முதல்வர் மகுடம் சூட்டி மகிழ்ந்தார். தள்ளாத வயதிலும் பதவியை விட்டுக்கொடுக்க தயங்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வேளையில் முலாயம்சிங் மகனுக்கு தாமாக வழிவிட்ட நிலை வெகுவாக பாராட்டை பெற்றது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு:
இளம் வயதில் முதல்வர் பொறுப்புக்கு வந்த அகிலேஷசுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ஸ்திரமான ஆட்சி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போக, போக அவரது நிர்வாக திறமின்மை வெளியே வர துவங்கியது. முக்கியமான சட்டம் ஒழுங்கு நிலை மோசமானது. முஷாபர்நகர் கலவரம் , 60க்கும் மேற்பட்டோர் பலி, இங்கு தொடர்ந்து பல நாட்கள் ஊரடங்கு, முகாம்களில் மக்கள்தங்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மதுரா மற்றும் பதேபூர் கலவரம், சாதி,மத மோதல்கள், கொலை, கொள்ளை, பலாத்காரம் தலைவிரித்தாடியது. மேலும் அமைச்சர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது , தொலைந்து போன அமைச்சர் அசாம்கானின் எருமையை தேடுவது என அகிலேஷ் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.
குடும்பச்சண்டை;
இறுதிக்கட்டத்தில் தந்தை முலாயம்சிங்குடனான மோதல்கள், சித்தப்பா சிவபால் உடன் குடும்பச்சண்டை ஆகியன மூலம் மக்கள் மத்தியில் அகிலேஷ் மீது இருந்த மதிப்பை அவரே தானே குழி தோண்டி புதைத்து கொண்டார். குறிப்பாக சமாஜ்வாடி கட்சியே எனக்குத்தான் சொந்தம். தானே தலைவர் என அவர் கூட்டிய கூட்டத்தில் தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்டார். இந்த நேரத்தில் முலாயம், அகிலேஷ் ஆதரவாளர்கள் இருதரப்பாக மோதிக்கொள்ளும் வகையில் பதட்டம் உருவானது. மாறி, மாறி அவரவர் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் படலமும் அரங்கேறியது. தந்தை வீட்டுக்கும், மகன் வீட்டுக்கு பாதுகாப்பாக இருப்பதே போலீசாரின் தலையாய பணியாக இருந்தது.
தேர்தல் அறிவித்த பின்னர் சைக்கிள் சின்னம் முலாயமுக்கா ? அகிலேசுக்கா ? என்ற குழப்பம் ஏற்பட்டது. தேர்தல் கமிஷன் வரை சென்றது உ.பி.,யில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் முஸ்லிம் ஓட்டுக்களை நம்பிய சமாஜ்வாடியும், மாயாவதியின் பகுஜன்சமாஜ்வாடியும் ஓட்டுக்களை பங்கு போட்டு பிரித்து கொண்டது. பா.ஜ.,வுக்கு விழ வேண்டிய ஓட்டுக்களும், அகிலேஷ் மீதான வெறுப்பு ஓட்டுகளும், மோடியின் நம்பிக்கையான பேச்சு, சமீபத்திய ரூபாய் நோட்டு வாபஸ், மோடியின் பிரசார சக்தி மூலம் கிடைத்த ஓட்டுகளும் பா.ஜ.,வை வெற்றி உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அமைதி காத்த முலாயம்:
குறிப்பாக தந்தையை மகன் எதிர்த்து அரசியல் செய்த போதும், காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்த போதும் முலாயம்சிங் தனது கோபத்தையும், வெறுப்பையும் வெளிப்படையாக முலாயம்சிங் காட்டவில்லை. பெரும் அமைதி காத்தார். அத்துடன் அகிலேஷ்சுடன் முலாயம்சிங் இணைந்து எந்தவொரு பிரசாரமும் செய்யவில்லை. இதுவும் அகிலேசுக்கு மைனசாக அமைந்தது.
மொத்தத்தில் முலாயம்சிங் கட்சியில் நடந்த குடும்பச்சண்டை, தந்தையை எதிர்த்து மகன் அரசியல் செய்தது அந்த கட்சிக்கு பெரும் வீழ்ச்சியை தந்தது. இதுவே பா.ஜ.,வுக்கு பெரும் வெற்றிக்கு துணையாக அமைந்தது. ஆட்சி அமைக்க 202 தொகுதிகள் போதுமானது. முலாயம்சிங், மாயாவதி கட்சிக்கு பெரும் தோல்வியை கொடுத்து 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ., பெற்றுள்ளது.
எது எப்படியோ இந்தியாவின் பெரும் மாநிலமான உ.பி.,யில் பா.ஜ., செல்வாக்கு பெற்றிருப்பது இந்திய பொருளதார வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும் என்பது நிசப்தமான உண்மை. மேலும் ராஜ்யசபாவில் எம்.பி.,க்களின் எண்ணிக்கை, ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடும் அதிகாரம் ஆகியன பா.ஜ.,வுக்கு பலம் சேர்த்துள்ளது.


