திருவானைக்காவல் கோ யில் பங்குனி தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

Published:

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி கோவிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பஞ்ச பூதங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வர-அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. 

இந்த ஆண்டு பங்குனி தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 23-ந் தேதி கோவிலின் 8 திசைகளிலும் கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  28-ந் தேதி நடந்தது. 

தேரோட்டத்தையொட்டி சுவாமி ஒரு பெரிய தேரிலும், அம்பாள் மற்றொரு பெரிய தேரிலும் அதிகாலையில் எழுந்தருளினர். முன்னதாக விநாயகரும், சுப்ரமணியரும் சிறிய தேரில் புறப்பட்டு தேரோடும் வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். 
அதன்பின்னர், காலை 5.45 மணிக்கு சுவாமி தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் மேல உள்வீதி, வடக்கு உள்வீதி, கீழ உள்வீதி, தெற்கு உள்வீதி ஆகிய 4 பிரகாரங்களில் வீதி உலா வந்தது. காலை 7 மணிக்கு மேல உள்வீதியும், தெற்கு உள்வீதியும் சந்திக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது.
பின்னர் காலை 7.30 மணிக்கு அம்பாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்பாள் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதன் பின்னர் மறுபடியும் சுவாமி தேரை வடம்பிடித்து இழுத்தனர். இரண்டு தேரும் காலை 10.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. 
தேரோட்டத்தை யொட்டி அகிலாண்டேஸ்வரி, ஜம்புகேஸ்வரர், சோமாஸ் கந்தர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
தேரோட்டத்தின் போது யானை அகிலா தேருக்கு முன்னால் செல்ல மேளதாளங்கள், வாண வேடிக்கையுடன் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்தனர்.
தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ, சிவ என்று விண்ணதிர கோஷம் எழுப்பி தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். 
தமிழகத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனி தேர்களில் வலம் வருவது திருவானைக்காவலில் மட்டும் தான். 
தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்ரியா உள்துறை மேலாளர் ஆறுமுகம் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img