பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செங்கல்பட்டு சுங்கச்சாவடி கொள்ளையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையில், சுங்கச் சாவடி ஊழியர்களே ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.
சென்னை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனுார் சுங்கச்சாவடியை கடந்து, தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுநருக்கும் இடையே கடந்த 25ஆம் தேதி அதிகாலை, கட்டண வசூல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.
சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளனர். அதற்கு பஸ் பயணிகள் சேர்ந்து கோபத்துடன் நுழைந்து பதிலடி கொடுத்ததில், சுங்கச்சாவடி மொத்தமாக சூறையாடப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் தப்பி ஓடினர். இதுதொடர்பாக, செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதை அடுத்து கடந்த ஒரு வாரமாக சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தப் பட்டுள்ளது. சுங்கச்சாவடியை நிர்வகிக்கும் நிறுவனத்துக்கு தினமும் 40 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடியில் ரூ.18 லட்சம் காணாமல் போனதாக புகார் கூறப் பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
வன்முறை நிகழ்ந்துகொண்டிருந்த போது, சுங்கச்சாவடி அறைக்குள் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு உள்ளே புகும் நபர், பொருட்களை சேதப்படுத்தி, பணப்பையை தூக்கிச் செல்வது பதிவாகியுள்ளது.
மேலும், அதிகமாக கலவரம் நடந்தது போல் தெரிவதற்காக, ரூ.500 நோட்டுக்கட்டை சிதறவிடுவதும் அந்த வீடியோக் காட்சியில் தெரிகிறது. குறிப்பாக, வன்முறை முடிந்த பின்னர் நள்ளிரவு 1.30க்கு பணம் திருடப்பட்டது அம்பலமாகியுள்ளதால், இது தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் 5 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவர் போலீஸில் சரண் அடைந்துள்ளனர். சுங்கச்சாவடி மீது தாக்குதல் நடத்தப் பட்ட நிலையில், பணத்தையும் சேர்த்து கொள்ளை அடித்துச் சென்று விட்டார்கள் என்று பொய்ப் புகார் கொடுப்பதற்காக அவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.