![வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழக போலீஸுக்கும்… இப்போது பயங்கரவாதிகள் மிரட்டல்! 1 terror threat](https://dhinasari.com/wp-content/uploads/2020/02/terror-threat.jpg)
தமிழக போலீஸாருக்கும் இப்போது பயங்கரவாதிகள் சமூக ஊடகம் மூலம் கொலை மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடா்பாக சைபா் குற்றப்பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தில் வெகு காலமாகவே பயங்கரவாதிகளின் நடமாட்டம் குறித்து அவ்வப்போது எச்சரிக்கைகளைச் செய்து வருகின்றனர் சமூக ஆர்வலர்கள். ஜெயலலிதா இருந்த போதும் ஆம்பூரில் ஏற்பட்ட கலவரமும் அப்போது போலீஸாரை கண்மூடித் தனமாக தாக்கி காக்கிச் சட்டைக்கான அனைத்து கௌரவத்தையும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் காலி செய்த போதும், காவல்துறையினர் அமைதியாகவே வேடிக்கை பார்த்தனர்.
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் தங்களுக்கென உளவாளிகளை வைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள், பொதுமக்கள் அல்லது எதிர்தரப்பினர் ஏதாவது புகார் கொடுக்க வந்தாலோ, அல்லது ஏதாவது குற்றச் சம்பவங்களில் இசுலாமிய அடிப்படைவாத குழுக்களைச் சேர்ந்த யாரேனும் விசாரணைக்கு அழைக்கப் பட்டாலோ, உடனடி உளவுத் தகவல் பெற்று, தங்கள் நபர்களைத் திரட்டி, காவல்நிலையங்களை முற்றுகையிடுவது, உள்ளே புகுந்து அடாவடியில் ஈடுபடுவது, விசாரணை நபரை தாங்களாகவே போலீஸாரின் பிடியில் இருந்து மிரட்டி விடுவித்துச் செல்வது என குழு மனப்பான்மையில் ஈடுபட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
![வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழக போலீஸுக்கும்… இப்போது பயங்கரவாதிகள் மிரட்டல்! 2 wilson](https://dhinasari.com/wp-content/uploads/2020/02/wilson.jpg)
ஆம்பூர் கலவரத்துக்குப் பின்னர், தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களில் காவல்துறையினர் அமைதியாகவே வேடிக்கை பார்த்துள்ளனர். சொல்லப்போனால், தமிழக அரசியல் தலையீடு காரணமாகவோ அல்லது உள்ளூர் நெருக்கடிகள் காரணமாகவோ அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்துறையினர், தற்போது தேசியப் புலனாய்வு முகமை என்ற என்.ஐ.ஏ., மத்திய அரசால் அமைக்கப் பட்டு, செயல்படத் தொடங்கியதும், தாங்களும் அதற்கு ஈடுகொடுத்து வேலை செய்யவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களையும், பயங்கரவாத இயக்கங்களை ஆதரிக்கும் நபா்களையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகளை க்யூ பிரிவு போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா். இதில், ஐ.எஸ். பின்புலத்துடன் அல் ஹந்த் என்ற அமைப்பு செயல்படுவதை தமிழக காவல்துறையின் மத இயக்கங்களைக் கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கண்டறிந்தனா்.
![வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழக போலீஸுக்கும்… இப்போது பயங்கரவாதிகள் மிரட்டல்! 3 kalikavalai](https://dhinasari.com/wp-content/uploads/2020/01/kalikavalai-1024x669.jpg)
விசாரணையில், தமிழக, கேரள, கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த இளைஞா்கள் இந்த இயக்கத்தில் இணைந்திருப்பதும், இதன் தலைவராக அம்பத்தூா் இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட காஜா மொய்தீன் இருப்பதும் தெரியவந்தது. இவா் ஏற்கெனவே ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழகத் தலைவராக இருப்பதும் தெரியவந்தது. அல் ஹந்த் இயக்கத்தினா் குடியரசு தினத்தையொட்டி சதிச் செயலில் ஈடுபட திட்டமிட்டதை அறிந்த க்யூ பிரிவு போலீஸாா், அவா்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ், அப்துல் சமது என மூன்று பேரை தில்லி அருகே வாஸிராபாத்தில் தில்லி போலீஸாா் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி கைது செய்தனா். தொடர்ந்து காஜா மொய்தீன் கூட்டாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
மற்றொரு புறம், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட தவ்பீக், அப்துல் ஷமீம் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் பயங்கரவாதிகள் 17 போ் கைது செய்யப்பட்டனா். இதில் பெரும்பாலானோர் க்யூ பிரிவு போலீஸாரால் கைது செய்யப் பட்டனர்.
ஏற்கெனவே எஸ்.எஸ்.ஐ., வில்சன் கொலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருவர் கொடுத்த வாக்குமூலத்தில், தங்கள் அமைப்பினரை என்.ஐ.ஏ., மற்றும் போலீஸார் கைது செய்து வருவதால், அவர்களை எச்சரிக்கை செய்யும் விதமாகவே வில்சனை சுட்டுக் கொன்றதாகக் கூறியுள்ளனர். எனவே இதுவரை வேடிக்கை பார்த்து வந்த போலீஸார், இப்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத பயங்கரவாதிகளின் இலக்காக இதுவரை இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்தான் இருந்தனர் என்ற நிலையில், போலீஸாரும் பயங்கரவாதிகளின் இலக்காகியுள்ளது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தமிழக போலீஸுக்கும்… இப்போது பயங்கரவாதிகள் மிரட்டல்! 4 kanyakumari police1](https://dhinasari.com/wp-content/uploads/2020/01/kanyakumari-police1.jpg)
இந்த நிலையில், சமூக ஊடகமான டெலிகிராமில் கடந்த இரு நாள்களாக புகைப்படத்துடன் ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. அந்தப் புகைப்படத்தில் இரு ஏ.கே.47 துப்பாக்கிகளும், அதன் அருகே துப்பாக்கி தோட்டாக்களும் உள்ளன. அதன் நடுவே ஒரு கடிதம் வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘தில்லி சிறப்புப் பிரிவு, தமிழக க்யூ பிரிவு போலீஸாருக்கு… நாங்கள் உங்கள் பொய்களை கவனித்து வருகிறோம். விரைவில் பதிலடி கொடுப்போம். காத்திருங்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு மேலும் அதிா்ச்சியடைந்த காவல்துறை அதிகாரிகள், சைபர் குற்றப் பிரிவு போலீஸார், அந்தப் புகைப்படம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
எனினும், அந்தப் புகைப்படம் மாா்பிங் செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதா அல்லது துப்பாக்கி, தோட்டாக்கள் வைக்கப்பட்டு புகைப்படமாக எடுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்றெல்லாம் போலீஸார் அந்தப் படத்தைப் பற்றிய விசாரணையில் இறங்கிக் கொண்டிருக்காமல், உண்மையிலேயே தங்களுக்கு விடுக்கப் பட்டுள்ள மிரட்டலின் பின்னணி, மிரட்டலில் ஈடுபட்டுள்ளது யார் என்றெல்லாம் விசாரணை நடத்தி தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
இதனிடையே, இவ்வாறு காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம், அரசியல் ரீதியில் கையில் எடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., தேசிய தலைவர் ஹெச்.ராஜா, பிரச்சினையின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சிஏஏ போராட்டங்கள் ஆகியவை வெறும் போர்வை மட்டுமே. உண்மையில் தேசப் பிரிவினையின் முன்பிருந்த இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு நாட்டை இட்டுச்செல்லும் முயற்சியே இவைகள். காங், கம்யூனிஸ்ட், திமுக வின் தேசவிரோதத்தை தோலுரிப்போம்… என்று குறிப்பிட்டுள்ளார். இதுவும் இப்போது அடுத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கு ஏற்ப… பயங்கரவாதச் செயல்களுக்கு பகிரங்கமாகவே ஆட்களைத் திரட்ட இது போன்ற வீடியோக்கள் மூலம் அறைகூவல் விடுக்கிறார்கள் சிலர். இவர்கள் தங்களுக்கென அமைப்புகள் வைத்துக் கொண்டு, அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தேசிய நீரோட்டத்தில் அனைத்து மக்களுடனும் ஒன்றிணைந்து வாழ விரும்பும் இஸ்லாமியர்களையும் இளைஞர்களையும் கூட, மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் ஆக்குகின்றனர். இவர்களை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை என்ற காரணத்தால்தான் தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் பெருக்கெடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டுகின்றனர் சமுக ஆர்வலர்கள்.
அடுத்து, தமிழின் பெயரால், தமிழுணர்வின் பெயரால், இச்லாமிய பயங்கரவாதத்தைப் பரப்பும் நபர்கள், தேர்தலில் வென்று சட்டமன்றத்திலும் உறுப்பினர்கள் ஆகிவிட்டதால், போலீஸாரால் நடவடிக்கை எதுவும் எடுக்கவும் முடிவதில்லை என்கின்றனர்.