மதுரை: மதுரை அருகே சாலையில் கிடந்த 3 சவரன் செயினை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் ராஜ். வயது 19. இவர் மதுரையில் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் சோழவந்தானுக்கு சொந்த வேலையாக வந்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சோழவந்தான் காவல்நிலையம் அருகே ரோட்டில் 3 சவரன் தங்க செயின் கிடப்பதைப் பார்த்த இவர், அதை உடனடியாக எடுத்து, சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பில் இருந்த ராமநாராயணிடம் ஓப்படைத்தார்.
இதை அடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீஸார், சாலையில் தங்கச் செயினை தவறவிட்ட தச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரியிடம் அதை ஓப்படைத்தனர். சாலையில் கிடந்த செயினை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்து, உரிய நபரிடம் சேர்க்க உதவியதற்காக கல்லூரி மாணவரையும் போலீஸாரையும் மக்கள் பாராட்டினர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை