
சென்னை:
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குரல் வாக்கெடுப்பு நடந்தது. அதில் ஓபிஎஸ் அணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழக சட்டப் பேரவை, அவைத்தலைவர் தனபால் தலைமையில் இன்று காலை தொடங்கியது. அவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ‘எம்.எல்.ஏ சரவணனின் வீடியோ காட்சிகள்’ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றார். எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது என அவைத்தலைவர் கூற, தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் விவாதிக்க முடியாது எனக் கூறிய சபாநாயகர், சபைக்கு கட்டுப்படுங்கள், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
கடும் அமளிக்கிடையே ஜி.எஸ்.டி. சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி மசோதாவைத் தாக்கல் செய்தார்.
சரவணன் எம்.எல்.ஏ வீடியோ தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவர வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர் உத்தரவிட்டதன் பேரில் அவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏக்களும் வெளியேற்றபட்டனர்.
இந்தப் பிரச்னை நடந்து கொண்டிருந்த போது ஓ.பி.எஸ்.அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைதி காத்தனர். எடப்பாடி பழனிச்சாமி பேசும் வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அமைதியாக இருந்தனர். பின்னர் மானியக் கோரிக்கை விவாதத்தில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.



