தாயே யசோதா-ஊத்துக்காடு பாடல். ராகம்: தோடி தாளம்: ஆதி ஆ – ஸரிகமபதநிஸ் அ – ஸநிதபமகரிஸ
பல்லவி தாயே! யசோதே! – உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலக்ருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி! (தாயே) அனுபல்லவி தையலே! கேளடி உந்தன் பையனைப் போலவே – இந்த வையகத்தில் ஒரு பிள்ளை ஐய்யய்ய! நான் கண்டதில்லை (தாயே) சரணம் 1. காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க – முத்து மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்! காலசைவும் – கையசைவும் – தாளமோடிசைந்து வர நீலவண்ணக் கண்ணனிவன் *நிர்த்தனமாடுகிறான்! பாலனென்று தாவியணைத்தேன்! – அணைத்த என்னை மாலையிட்டவன் போல் – வாயில் முத்தமிட்டாண்டீ! பாலனல்லடி! உன்மகன் – ஜாலம்மிக செய்யும் க்ருஷ்ணன் நாலுபேர்கள் கேட்கச் சொல்ல – நாணமிக வாகுதடீ! (தாயே) 2. அன்றொருநாள் இந்தவழி வந்த விருந்திருவரும் அயர்ந்து படுத்துறங்கும் போதினிலே – கண்ணன் தின்றதுபோகக் கையில் இருந்த வெண்ணையை – அந்த விருந்தினர் வாயில் நிறைத்து மறைந்தனனே! நிந்தைமிகு பழியிங்கே பாவமங்கே என்றபடி சிந்தைமிக நொந்திடவும் செய்யத்தகுமோ நந்தகோபற்கிந்தவிதம் – அந்தமிகு பிள்ளைபெற நல்லதவம் செய்தாரடி – நாங்கள் என்ன செய்வோமடி (தாயே) 3. எங்கள்மனை வாழவந்த – நங்கையைத் தன்னம் தனியாய் துங்க யமுனாநதிப் போகையிலே – கண்ணன் சங்கையுமில்லாதபடி – பங்கயக் கண்ணால் மயக்கி எங்கெங்கோ அழைத்துச் சென்று நிசி வந்தான் “உங்கள்மகன் நான் என்றான்! – சொல்லி நின்றபின் தங்குதடையின்றி வெண்ணைத் தாரும் என்றான் இங்கிவனைக் கண்டு இள – நங்கையரைப் பெற்றவர்கள் ஏங்கி – எண்ணித் தவிக்கின்றார்! – நாங்கள் என்ன செய்வோமடீ! (தாயே) 4. தொட்டிலிலே பிள்ளை கிள்ளி விட்டதும் அவை அலற விட்ட காரியம் அகல வெண்ணை தின்றான்! கட்டின கன்றை யவிழ்த்து – எட்டியும் ஒளித்துவிட்டு மட்டிலாத் தும்பை கழுத்தில் – மாட்டிக் கொண்டான்! விட்டு விட்டு – “அம்மே” என்றான் கன்றினைப் போலே அட்டியில்லாத மாடும் “அம்மா” என்றதே! கிட்டின குவளையோடும் எட்டினால் “உன் செல்வமகன்!” பட்டியில் கறவையிடம் – பாலை யூட்டுறானடீ! (தாயே) 5. சுற்றி சுற்றி என்னை வந்து – அத்தை வீட்டு வழி கேட்டான் சித்தத்துக் கெட்டும் வரையில் சொல்லி நின்றேன் அத்துடன் விட்டானோ பாரும் ஆத்தங்கரை வழி கேட்டான் அத்தனையும் சொல்லிவிட்டு நின்றேன் வித்தகமாய் ஒன்று கேட்டான் நாணமாகுதே!! முத்தத்துக்கு வழிகேட்டு சத்தமிட்டாண்டீ அத்தனை இடம் கொடுத்து – மெத்தவும் வளர்த்து விட்டாய்! இத்தனை அவனைச் சொல்லக் குத்தமில்லையேயடி! (தாயே) 6. வெண்ணை வெண்ணை தாருமென்றான்! வெண்ணை தந்தால் தின்றுவிட்டு பெண்ணைத் தாரும்! என்று கண்ணடிக்கிறான்! வண்ணமாய் நிருத்தமாடி – மண்ணினைப் பதத்தால் எற்றிக் கண்ணிலே இறைத்துவிட்டுக் களவாடினான்! பண்ணிசையும் குழலூதினான்! – கேட்டு நின்ற பண்பிலே அருகில் வந்து – வம்புகள் செய்தான்! பெண்ணினத்துக்கென்று வந்த – புண்ணியங்கள் கோடி கோடி எண்ணீ உனக்காகுமடி – கண்ணியமாய்ப் போகுதடீ! (தாயே யாசோதே!) 7. முந்தாநாள் – அந்தி நேரத்தில் செந்தமுடன் கிட்டே வந்து வித்தைகள் பலவும் செய்து விளையாடினான் பந்தளவாகிலும் வெண்ணை – தந்தால் விடுவேனென்று முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான் அந்த வாஸுதேவன் இவன்தான் – அடி யசோதே! மைந்தனெனத் தொட்டிழுத்து மடிமேல் வைத்தேன் வைத்தால் சுந்தர முகத்தைக் கண்டு – சிந்தையுமயங்கு நேரம் அந்தர வைகுந்தமோடு – எல்லாம் காட்டினானடி! (தாயே யசோதே!



