சென்னை: கோடைக்காலம் வந்துவிட்டதால், குடிநீர்ப் பந்தல்கள் அமைக்குமாறு கட்சினருக்கு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்! மக்கள் நலப் பணிகளை தன்னலம் கருதாது ஆர்வத்துடனும், அக்கறையுடனும் செயல்படுத்துவதில் `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ எப்பொழுதும் முன்னணியில் இருந்து வருவதை மக்கள் நன்கு அறிவர். அந்த வகையில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் தற்போது ஆற்ற வேண்டிய பணி ஒன்றினை உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். அது தான் ஆண்டுதோறும் கோடைக் காலங்களில் குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் பணி. வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கிவிட்டதால், கழக உடன்பிறப்புகள் தாங்கள் வாழும் பகுதிகளில் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலையில் ஒரு முறையும், மதியம் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். – என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
To Read this news article in other Bharathiya Languages
கோடைக்கு ஏற்ப குடிநீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari