
கொரோனா காரணமாக திருவண்ணாமலை குபேர லிங்கம் தரிசனம் செய்வதற்கு கிரிவலம் வருவதற்கும் 13.12.2020 அன்று பக்தர்கள் பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்…
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் 14 கிலோ மீட்டர் மலைப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என 8 அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளது. அஷ்ட லிங்கங்களில் 7-வது லிங்கமாக அமைந்துள்ள குபேர லிங்கம் தரிசனம் செய்து, கிரிவலம் வருவதற்காக கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும், லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து வருகிறார்கள். இந்த ஆண்டு வரும் 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று குபேர லிங்கம் தரிசனம் செய்து, கிரிவலம் வருவதற்கு உகந்த நாள் என சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் covid-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக கடந்த 24.04.2020 முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது தளர்வுகளுடன் 31.12.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொதுமக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
கொரோனா காரணமாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேர லிங்கம் தரிசனம் மற்றும் கிரிவலம் வருவதற்கு 13.12.2020 அன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அன்றைய தினம் அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் மூலமாக குபேரலிங்கம் திருக்கோயில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குபேரலிங்கம் திருக்கோயில் வருவதற்கும் திருவண்ணாமலை 14 கிலோமீட்டர் மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வதற்கும் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நோய்த்தொற்று பரவாமல் பொது மக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்… என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
- எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை