
ராஜபாளையம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டுக் கொண்ட புது மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் வசிப்பவர் 24 வயதான முகேஷ். இவருக்கும் இவரது தாய்மாமா மகளுக்கும் திருமணம் முடிந்து ஒன்றரை மாதம் ஆகியுள்ளது. இந்நிலையில் முகேஷுக்கு காய்ச்சல் மற்றும் இருமல் தொந்தரவு ஏற்பட்டதால் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர் ஊசி போட்ட பிறகு, அவருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர் வேறு ஊசி போட்டுள்ளார். உடனே உடல் சோர்வு ஏற்பட்டு மகேஷ் மயங்கி கீழே விழுந்துள்ளார்
இந்நிலையில் அங்கிருந்து உடனடியாக இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சாதாரண காய்ச்சலுக்காக ஊசி போட சென்ற முகேஷ் திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறிய உறவினர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.