பேஸ்புக் மூலம் பழகி பள்ளி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து இணையவழி கல்வி பயின்று வந்துள்ளார். இதற்காக பெற்றோர்கள் அலைபேசி ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளனர்.
இதன்மூலமாக மாணவி முகநூல் கணக்கு தொடங்கவே, முகநூல் வாயிலாக விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. காமுகன் தமிழ்ச்செல்வன் முதலில் நல்லவன் போல பழகி, சிறுமியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளான்.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடந்த 5 மாதமாக காதலித்து வந்த நிலையில், அவ்வப்போது வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இதன்போது, தமிழ்செல்வன் மாணவியை புகைப்படம் எடுத்து வைத்துள்ளான். இதனை ஆபாசமாக சித்தரித்து சிறுமிக்கு அனுப்பி, தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டல் விடுத்துள்ளான்.
மேலும், ஆசைக்கு இணங்காத பட்சத்தில் ஆபாசமாக சித்தரித்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்வேன் என்றும் மிரட்டவே, பயந்து போன சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தமிழ்ச்செல்வனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், முகநூலில் வரும் நட்புகளை நம்பி சிறுமிகள், பெண்கள் காதல் வலையில் வீழவேண்டாம் என்றும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.