தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி யுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறதோ இல்லையோ, மூலை முடுக்குகளில் எல்லாம் மதுபானம் ஆறாக ஓடுவதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில்… ‛தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தமிழக அரசு படிப்படியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் விதமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கியுள்ளது.
பள்ளிக்கூடம், குடியிருப்பு அருகே வைப்பதற்கு டாஸ்மாக் ஒன்றும் புத்தகக் கடையோ, மளிகைக் கடையோ இல்லை. மாநில ஆறுகளில் நீர் ஓடுகிறதோ இல்லையோ, மதுபானம் ஆறாக ஓடுகிறது. பூரண மதுவிலக்கை ஒட்டுமொத்த சமூகத்தின் குரலாகப் பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் அப்போது தெரிவித்தனர்.