திருப்பூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கணவன் உயிரிழந்ததை தொடர்ந்து மனைவி விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை துவங்கி விட்ட நிலையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள வெள்ளஞ் செட்டிபாளையம் மேற்கு தோட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி வயது 83 அவரது மனைவி சுப்புலட்சுமி வயது 67 இருவரும் தனது மகள் வீட்டிற்கு கடந்த மாதம் சென்றுவிட்டு 27ஆம் தேதி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் மகள் மற்றும் மகன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து கடந்த 31ஆம் தேதி கணவன் மனைவி இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் வீட்டில் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு வந்தனர். வீட்டிலேயே அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை கணவன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி அருகிலுள்ள தனது விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு கவசத்துடன் கிணற்றுக்குள் இறங்கி சடலத்தை மீட்டனர்.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கிணற்றில் இருந்த தண்ணீரை முழுவதுமாக அகற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.