5ரூ.நாணயத்தை விழுங்கிய சிறுமி! ஆப்ரேஷன் இன்றி அகற்றிய மருத்துவர்கள்!

Published:

five rs coin
five rs coin

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள குபேரபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் போஜன். இவரின் மூன்றரை வயது மகள் தனுஷ்யா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, கையில் கிடைத்த ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து வாயில் போட்டு விழுங்கியிருக்கிறாள்.

தொண்டையில் சிக்கிய நாணயத்தால் எச்சிலைக்கூட விழுங்க முடியாமல் துடித்த சிறுமியைப் பார்த்து பெற்றோர் பதறிப்போயினர். உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

காது, மூக்கு, தொண்டை பிரிவு சிறப்பு நிபுணர்கள் எம்.ஆர்.கே.ராஜா செல்வம், சிந்துமதி, மயக்கவியல் நிபுணர் திவாகர் ஆகியோர் எக்ஸ்ரே மூலம் சிறுமியை பரிசோதித்தனர்.

அதில், தொண்டையிலிருந்து செல்லும் உணவுக் குழாய் பாதையில் நாணயம் சிக்கியிருப்பது தெரியவந்தது. சிறுமியின் வயிற்றில் உணவு மற்றும் தண்ணீர் இருந்ததால் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கவில்லை.

x ray
x ray

சிறுமியை ஐந்து மணி நேரம் மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருந்தனர். சிறுமியின் சுவாசமும் சீராக இருந்தது. அதன்பிறகு, அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

அங்கு, அறுவை சிகிச்சை செய்யாமலேயே சிறுமியின் தொண்டையில் சிக்கிய நாணயத்தை `எண்டோஸ்கோப்பி’ சிகிச்சை மூலம் எடுக்க முயற்சி செய்தனர். உள்நோக்கி கருவி ஒன்றை செலுத்தி அரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் நாணயத்தை வெளியில் எடுத்தனர். இதன் பின்னரே, சிறுமியின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதில், மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, கடுமையான கொரோனா தொற்று பரவும் இந்தச் சூழலில், சிறுமி மற்றும் அவரைத் தூக்கி வந்து அனுமதித்த தாயாருக்குத் தொற்றுப் பரிசோதனை செய்யும் முடிவுக்கே மருத்துவர்கள் செல்லவில்லை.

உடனடியாக சிகிச்சை தேவை என்பதால் அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்

மருத்துவர்கள். வளர் பருவத்தில் குழந்தைகளை மிக மிக கவனமாக பெற்றோர் கவனிக்கவும், கண்காணிக்கவும் செய்ய வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்துவருவதால் சில நேரங்களில் உடனடி சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

இதனிடையே, அறுவை சிகிச்சையின்றி சிறுமியின் உணவுக் குழாயில் சிக்கிய நாணயத்தை அகற்றிய மருத்துவர்களையும், உதவியாளர்களையும் மருத்துவமனை டீன் திருமால்பாபு பாராட்டினார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img