“தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை குறைக்கும் முடிவால் விவசாயிகள் பாதிக்கப்படுவர் ” என்று, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்துக் குறிப்பிட்ட போது… ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 3.00ரூபாய் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தங்களின் விற்பனையும், அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் பாதிக்கப்படும் என்பதால் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் நாளை (11.05.2021) முதல் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3.00ரூபாய் வரை குறைக்கின்றன.
இதன் மூலம் பால் கொள்முதல் விலை குறைந்தபட்சம் ஒரு லிட்டர் 17.00ரூபாய் முதல் அதிகபட்சமாக 26.00ரூபாயாக இருக்கும். இந்த பால் கொள்முதல் விலை குறைப்பால் பால் உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தனியார் பால் நிறுவனங்கள் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும்… என்றார்.