சென்னை: குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்… குழந்தை திருமணத் தடைச் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என மதுரை உயர்நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்கிறது. குழந்தைகளின் கல்வி, உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாநில அரசு பிறப்பித்த குழந்தைத் திருமணத்தடைச் சட்டத்தை எதிர்த்து, இச்சட்டம் முஸ்லீம்களுக்குப் பொருந்தாது என வழக்கு தொடர்ந்தனர். இதனைக் கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் கீழ்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்ததுடன், மத நம்பிக்கை என்பது வேறு மத உரிமை என்பது வேறு என தெளிவுப்படுத்தி உள்ளது. பெண் வயதிற்கு வருவதே திருமணத்திற்கான தகுதி என்ற வாதம் மூடத்தனமானது. பெண்களின் உயர் கல்விக்கு இதுபோன்ற செயல்பாடுகள் தடையாக அமைகின்றன. ஒரு பெண் தனது வாழ்க்கையை துவக்க தேவையான கல்வி அறிவோடு, உடல், மன ரீதியான வலிமையையும் பெற வேண்டும். அப்போதுதான் தாம்பத்தியம் இணக்கமாகவும், குழந்தை பேறு சிறப்பாக அமையும். குடும்பப் பொறுப்பை ஏற்கும் முன் அதற்கான முதிர்ச்சியை பெண் அடைவதற்கு வயதும் ஒரு காரணமாக அமைகிறது. இந்நிலையில் இதுபோன்ற சட்டங்கள் அவசியமானது என்பதை அனைவரும் உணர வேண்டும். இச்சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம், பாலியல் துன்புறுத்தல், அச்சுறுத்தல், இனக் கவர்ச்சியால் மாணவர்கள் வழி தவறுவது குறித்த விழிப்புணர்வை உளவியலாரைக் கொண்டு பள்ளிகளவிலேயே கருத்தரங்கம் நடத்த அரசு முன் வரவேண்டும். காதல் எனும் பெயரில் பெண் குழந்தைகள் பயமுறுத்தப்படுகிறார்கள். காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் போன்றவை வீசும் கொடூரமும் நடைபெறுகிறது. இதனைத் தடுக்க மாணவர்களிடையே விழிப்புணர்வும், தற்காப்புக் கலை பயற்றுவித்தலும் அவசியம். சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்பவர்கள், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது , பாலியல் துன்புறுத்தல் முதலானவற்றை தடுக்க, அது குறித்து தகவல் அளிக்க குழந்தை உதவி மைய தொலைபேசி எண்கள், மற்றும் புகார் அளிக்கும் விவரம் பள்ளி அறிவிப்பு பலகையிலோ அல்லது தனி அறிவிப்பு பலகையாகவோ இடம்பெற செய்ய வேண்டும். தற்கொலைத் தடுக்க ஆலோசனைகளை வழங்கும் உதவி மையங்களின் தொலைபேசி எண்களும் விளம்பரப்படுத்த வேண்டும். காவல் துறையினரோடு மாணவர்கள் கலந்துரையாடல் போன்றவற்றை ஏற்படுத்தி சட்டத்தின் மீதும் நிர்வாகத்தின் மீதும் மாணவ பருவத்திலேயே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமே குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். இந்திய மக்கள் அனைவருக்குமான பொதுவான சிவில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் நெடுநாளைய கோரிக்கை. நமது அரசியல் சாசனமும் இதனை வலியுறுத்திக் கூறியுள்ளது. இத்தீர்ப்பானது, பொது சிவில் சட்டம் கொண்டு வர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறோம். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் பொது சிவில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. – என்று கூறியுள்ளார்.
குழந்தை திருமணத் தடைச் சட்டம் குறித்த தீர்ப்புக்கு இந்து முன்னணி வரவேற்பு
Popular Categories


