தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கு பிறகு தனது அரசியல் ரீதியான முதல் செயல்பாட்டை முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி துவங்கியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அரசியல் ரீதியிலான எவ்வித நடவடிக்கையிலும் வெளிப்படையாக ஈடுபடாமல் அமைதி காத்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. சட்டப்பேரவை வந்த போது கூட செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார்.
மேலும் தேர்தலுக்கு பிறகு பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தான் இருந்து வருகிறார். சென்னையில் தங்குவதை தவிர்த்து வருகிறார். அத்தோடு அரசியல் ரீதியிலான செயல்பாடுகளை தீவிரப்படுத்த புதிய வியூகங்களை வகுக்க மறுபடியும் இணைந்து செயல்படுவது குறித்தும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளை சேலத்தில் இருந்தபடியே மேற்கொண்டும் வருகிறார்.
கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என யாராக இருந்தாலும் சேலத்திற் வரவழைத்து சந்தித்து அவர்களுடன் கட்சி மற்றும் அரசியல் தொடர்பான பேச்சுகளை மிகத் தீவிரமாக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் திடீரென சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பானது. ஏனென்றால் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அதிமுக மற்றும் பாமக எம்எல்ஏக்களுடன் அங்கு திடீரென வருகை தந்தார்.
நேராக அதிகாரிகளை சென்று சந்தித்த எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளை சுட்டிக்காட்டி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.
அத்தோடு அதிகாரிகள் என்ன என்ன செய்தால் சேலம் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்பது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.
மேலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகளை மேம்படுத்தவும், முழுவதும் பணிகளை முடிக்காமலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த சேலம் இரும்பாலை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் அதிகாரிகளை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கொரோனா என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் அந்த நோயை தனது அரசு திறம்பட எதிர்கொண்டதாகக் கூறினார். அதனால் தான் தமிழகத்தில் முதல் அலையின் போது அதிகபட்ச கொரோனா பாதிப்பே சுமார் ஆறாயிரம் என்கிற அளவில் தான் இருந்தது.
ஆனால் தற்போது ஒரு நாளைக்கே கொரோனா பாதிப்பு 35ஆயிரம் பதிவாகியுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது தனக்கு வேதனை அளிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் வெறும் 6000 கொரோனா பாதிப்பு பதிவான கால கட்டத்திலேயே அதிமுக அரசு ஒன்றரை லட்சம் கொரோனா சோதனைகளை நடத்தியதாகவும் ஆனால் தற்போது 35ஆயிரம் வரை பதிவாகியும் அதே அளவிலான கொரோனா பரிசோதனைகளை தான் திமுக அரசு மேற்கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
மேலும் தினசரி கொரோனா பரிசோதனையை 3 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
அத்தோடு கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆட்சியில் என்ன செய்தோமோ அதை செய்தாலே போதும் என்றும் திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அத்தோடு செய்தியாளர் சந்திப்பின் போது அனைத்து கேள்விகளுக்கும் தனி ஒரு ஆளாக எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
சேலம் மாவட்ட பாதிப்புகள் தொடர்பான கேள்விகளையும் தனி ஆளாக எதிர்கொண்டு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். செய்தியாளர்களின் எந்த கேள்விக்கும் எடப்பாடி பேசிக் கொண்டிருக்கும் போது அருகாமையில் உள்ள எம்எல்ஏக்கள் குறுக்கிட்டு பதில் சொல்லி ஜனநாயகத்தை எல்லாம் காப்பாற்றவில்லை.
இவற்றுக்கு எல்லாம் உச்சமாக தமிழக அரசு கொரோனா நிவாரணமாக 4ஆயிரம் வழங்குவது போதுமா என்கிற கேள்விக்கு நிதி நிலைமைக்கு ஏற்ப தமிழக அரசு கொரோனா நிவாரணம் வழங்குகிறது என்கிற பதிலை அளித்து அனைவரையும் அசர வைத்தார்.
மாறாக கடந்த முறை திமுக தலைவர்கள் பேசியது போல் இல்லை நான்காயிரம் பத்தாது, பத்தாயிரம் கொடுக்க வேண்டும், 25ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எடப்பாடி எகத்தாளமாக பேசவில்லை.