
65 வயது முதியவருக்கு 35 வயதுடைய பெண் மீது ஏற்பட்ட திடீர் காதல், ஏற்க மறுத்ததால் விரக்தியில் ஆசை காதலியின் வீட்டை தீ வைத்து எரித்து நாசமாக்கிய முதியவர்.
சென்னை வேளச்சேரி, ராதா நகர் முதல் பிரதான சாலையில் வசித்து வருபவர் கவிதா(35). இவர் இரண்டாவது மாடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இவரது கணவருக்கு கை உடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது வாழ்வாதாரத்திற்காக கவிதா வசிக்கும் வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களாக காய்கறி, பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.
கவிதா விற்கும் காய்கறி, பழங்களை வாங்க தினந்தோறும் சென்னை கிண்டியை சேர்ந்த 65-வயதுடைய முருகன் என்பவரது சரக்கு வாகனத்தில் (TATA ACE), செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த ஒன்னறை மாதமாக 65 வயதுடைய முதியவர் 35 வயதுடைய கவிதாவிற்கு காதல் வலை வீசியுள்ளார்.
தன்னுடைய காதல் வலையில் கவிதாவை சிக்க வைக்க கவிதாவிடம் முதலில் செல்போனில் பேசியுள்ளார், கவிதா தன்னுடைய காதலுக்கு பச்சைகொடி காட்டாத நிலையில் தனது காதலை தெரிவிக்க கவிதா வீட்டிற்கே சென்றதாக கூறப்படுகிறது.
இருந்தும் கவிதா 65 வயதான முதியவரின் காதலை ஏற்க மறுத்ததால் தன்னால் முடிந்த பல்வேறு யுக்திகளை கையாண்ட முருகன் கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியதால் விரக்தியடைந்துள்ளார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குடும்பமே முக்கியம் என கருதிய கவிதா முருகனுக்கு பயந்து காய்கறி, பழக்கடை போடுவதையே இரண்டு வாரங்களாக நிறுத்தி விட்டார். இதனால் கவிதா வருமானமின்றி மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இரண்டு வாரங்களாக கவிதாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் கவிதாவின் வீட்டிற்கு சென்று பார்த்து வர டிப்டாப்பாக சென்றுள்ளார் முருகன். அங்கு சென்று பார்த்தபோது கவிதா வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் கடும் விரக்தியடைந்து கவிதா வசிக்கும் வாடகை வீட்டிற்கு தீ வைத்து எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். தீயை அணைக்க முயன்ற வீட்டின் உரிமையாளருக்கு வலது தோள்பட்டையில் தீக்காயம் ஏற்பட்டது.
முருகன் தொல்லையிலிருந்து தப்பிக்க கவிதா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தது பின்னர் விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் கவிதாவை தொடர்பு கொண்டு அவர் வசித்து வந்த வீடு எரிந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் எரிந்து உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் எரிந்து சேதமாயின.
இதுகுறித்து கவிதா வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் வீடு எரியும் போது மாடியில் இருந்து ஒருவர் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பின்னர் கவிதாவையும் போலீசார் விசாரித்ததில் வயதான முருகன் குறித்து கூறியுள்ளார். அதை தொடர்ந்து முருகனைப் பிடித்து போலீசார் விசாரித்த போது தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததாலும், இரண்டு வாரங்களாக தன்னை சந்திக்காமல் இருந்ததாலும் ஆத்திரத்தில் வீட்டை எரித்ததாக 65 வயதான முருகன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
முருகன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
முதியவரின் ஒரு தலை காதலால் வாடகை வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் கவிதாவின் நிலைதான் மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது.



