திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்லடம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் முத்து சுருளி, துரைமுருகன் ஆகிய இருவரும் கள்ளச்சந்தையில் விற்பதற்காக திண்டுக்கலில் இருந்து சொகுசு காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளனர்.
அதன்படி, அவர்கள் காரில் பல்லடம் சோதனைச்சாவடி அருகே வரும் போது, சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த மதுபாட்டில்கள் சாலையில் சிதறின. இதனால் உடனடியாக அங்கிருந்த காவலர்கள் இருவரும் தப்பி ஓடினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய தேடுதலில் காவலர்கள் இருவரும் சிக்கினர்.
ஊரடங்கு காரணமாக பொதுமக்களை சீர்படுத்த காவலர்கள் பாடுபட்டு வரும் நிலையில் சில காவலர்களின் இது போன்ற செயல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.