![தமிழகத்தில் மின்வெட்டு வர வாய்ப்பில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி! 1 minister senthilbalaji](https://dhinasari.com/wp-content/uploads/2021/07/minister-senthilbalaji-1024x576.jpeg)
மதுரை: தமிழகத்தில் மின்வெட்டு வர வாய்ப்பில்லையென, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில், ஐந்து மாவட்ட மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் கூறியது…
தமிழகத்தில், மழைகாலங்களில் மின் சப்ளைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை மின்வாரியத் துறையினர் தொடர்ந்து அகற்றி வருகின்றனர். மக்களின் தேவைக்கு ஏற்ப, மின் சப்ளையை தடையின்றி வழங்க அரசானது, துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது, மக்களிடையே மின் பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும், மின்சார வாரிய அலுவலர்கள் அனைவரும் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மின்சாரத்தை, சிக்கனமாக பயன்படுத்த அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டும்.
தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்களை நாம் சிக்கனமாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றார்.
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற மின்சாரத்துறை ஆய்வுக் கூட்டத்தில், தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ் சேகர் மற்றும் ஐந்து மாவட்ட மின்வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.