காஞ்சிபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த மகாலஷ்மி என்பவரை குடிமைப்பொருள் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் ரேஷன் கடையை நம்பிதான் காலத்தை ஓட்டி வருகின்றார்கள்.
சமீபகாலமாக ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் ரேஷன் பொருட்களை குறிப்பாக அரிசி, மண்ணெண்ணெய் ,சர்க்கரை போன்ற பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட வெள்ளக்குளம் தெரு பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் தனி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் வந்தது.
அவர் தலைமையில் விரைந்து சென்ற குடிமைப்பொருள் துறையினர் மகாலஷ்மி என்ற பெண்ணின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
மகாலட்சுமி வீட்டில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த மகாலக்ஷ்மியை கைது செய்தனர்.