ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் முதியவர் ஒருவர் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திங்கள் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் விருத்தாச்சலத்தை அடுத்து வந்த போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்த அந்த இளம்பெண் திடீரென எழுந்து அலறல் சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்த ரயிலில் பயணித்த இளைஞர்கள் எழுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த முதியவரை தாக்க முயற்சித்துள்ளனர்.
உடனடியாக அந்த முதியவர் எழுந்து வேகமாக ஓடி கழிவறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார்.
கடந்த ஒரு மணி நேரமாக, ரயிலில் பயணித்த இளைஞர்கள் கதவை தட்டியும் அந்த முதியவர் கதவை திறக்காமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து இளைஞர் ஒருவர் ரயிலில் எழுதப்பட்டிருந்த புகார் எண்ணை தொடர்புகொண்டு ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து அந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிலையில், போலீசார் அந்த முதியவர் கழிவறையில் ஒளிந்திருக்கும் பெட்டியில் ஏறி கதவைத் தட்டி அவரை கீழே இறக்கி உள்ளனர்.
ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் அந்த நபரை தாக்க முயற்சி செய்தனர் ஆனால் போலீசார் அதனை தடுத்து இவர் மீது கண்டிப்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அந்த முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
நள்ளிரவில் ஓடும் ரயிலில் முதியவர் செய்த இந்த செயலால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.