அந்தியூர் தேர்வீதியில் மின்சாதன கடையின் சுவர் இடிந்துவிழுந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்து சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். கொரானா தொற்று காரணமாக 3 மாதங்களுக்கு பின் ரத்து செய்யப்பட்ட வாரச்சந்தை இன்று மீண்டும் துவங்கியது.
இந்த வாரச்சந்தைக்கு பர்கூர் மலைப்பகுதியில் இருந்து தானியப்பயிர் விற்பதற்கு நேற்றிரவு 6 பேர் அந்தியூர் வந்தனர்.
இந்நிலையில் இவர்கள் 6 பேரும் அந்தியூர் தேர்வீதியில் உள்ள ராஜமாணிக்கம் மின்சாதன பொருள்கள் விற்கும் கடைமுன் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் பழமையான கடையின் சுவர் இடிந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 6 பேர் மீது விழுந்தது.
இதில், ஒரே ஊரைச் சேர்ந்த சித்தன், மாதேவன் மற்றும் சின்னபையன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தின் இடிபாடுகளிடையே சிக்கிய ராஜேஸ், சிவமூர்த்தி, மகேந்திரன் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வந்தனர்.