முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை,கரூர் உள்ளிட்ட இடங்களில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் சுமார் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடு உள்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர்.
அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 26 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 15 மணி நேரமாக நடைபெற்ற சோதனை கரூரில் நிறைவடைந்தது
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.