தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின்படி மதுரை, தேனி உள்ளிட்ட சில இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் – என்.ஐ.ஏ., சோதனை நடத்தினர்.
தேனி மாவட்டம் சின்னமனூரில் யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து ஜூலை 24 சனிக்கிழமை இன்று காலை 5 மணியில் இருந்து அவரது வீடு மற்றும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதை அடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதிகாரிகளின் சோதனையை அடுத்து அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
மதுரையிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தெப்பக்குளம் தமிழன் தெருவில் வசித்து வந்த அப்துல்லா என்பவர், இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக இன்றும் அப் பகுதியில் சோதனை மேற்கொள்ளப் பட்டது.