மேஜையில் வைத்திருந்த மின்விசிறி கீழே விழுந்ததில் 3 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முஹம்மத் ரிழ்வான் என்ற 3 வயது சிறுவன், காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியில் வசித்து வருகிறார்.
இந்த சிறுவனின் தாய் குளித்து விட்டு வெளியே வந்து பார்த்த போது, சிறுவன் கீழே விழுந்து கிடந்ததையும், சிறுவனுக்கு மேல் தங்களின் வீட்டில் வைத்திருந்த மேசை மின்விசிறி விழுந்து கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் சிறுவனின் தாய் பதறிப்போய் சிறுவனை எழுப்பிய போது, சிறுவன் அசைவில்லாமல் இருந்துள்ளான்.
இதனால் சிறுவனின் தாய் கதறி அழுத சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுவனை மீட்டு ஆரையம்பதி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதை அடுத்து, போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.