நாமக்கல் அருகே ஏடிஎம் இயந்திரத்திற்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளியை மோகனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் அடுத்த அணியாபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து சப்தம் கேட்டுள்ளது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற மோகனூர் போலீசார் ஏடிஎம் அறைக்குள் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இயந்திரத்திற்குள் இருந்து சப்தம் வந்து கொண்டிருந்தது. போலீசார் எட்டிபார்த்த போது இயந்திரத்திற்குள் ஒரு நபர் அமர்ந்து பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடிய அந்த நபரை பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் பரளி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலம் கிழக்கு சாம்தான் மாவட்டத்தைச் சேர்ந்த பேந்தரா ராய் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த மோகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.