நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது.
ஆனாலும், பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது. இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் 8 வயது சிறுமிக்கு 61 வயது முதியவர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள சில்லாங்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். 61 வயது நிரம்பிய இவர் வீட்டின் அருகே வசிக்கும் 8 வயது சிறுமியை அங்குள்ள ஒரு தோட்ட பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின்பேரில் காமக்கொடூரன் சங்கரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.