வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா காரணமாகவும், அறிக்கைகளை மின்னனு முறையில் தாக்கல் செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்து வரி செலுத்துவோர் தரப்பில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மத்திய அரசு நீடித்துள்ளது.
அதன்படி, 2020-2021ம் நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 30 ஆக இருந்தது.
பின்னர் இது 2021 அக்டோபர் 31ம் தேதியாகவும் மற்றும் 2022 ஜனவரி 15ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது இதற்கான கடைசி தேதி 2022 பிப்ரவரி 15 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2020-21ம் ஆண்டில் சர்வதேச பரிவர்த்தனை மற்றும் உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபடும் நபர்களின் அறிக்கையை கணக்காளர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, 2021 அக்டோபர் 31ம் தேதியாக இருந்தது.
பின்பு இது 2021 நவம்பர் 30ம் தேதியாகவும் மற்றும் 2022 ஜனவரி 31ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தற்போது கடைசி தேதி 2022 பிப்ரவரி 15ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 2021-2022 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான கடைசி தேதி 2021 அக்டோபர் 31ம் தேதியாக இருந்தது. பின்னர் இது 2021 நவம்பர் 30ம் தேதியாகவும் மற்றும் 2022 பிப்ரவரி 15ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது.
தற்போது 2022 மார்ச் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.