நாளை நமதே! கமலஹாசனின் சுற்றுப் பயணத் திட்டம்!

Published:

நடிகர் கமலஹாசன் தீவிர அரசியலில் குதிக்கத் தயாராகி வருகிறார். அண்மைக் காலமாக டிவிட்டர் பதிவுகளில் அரசியல் கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்த அவர், தற்போது, களத்தில் இறங்க ஆயத்தமாகி வருகிறார். இதை ஒட்டி, தனது சுற்றுப்பயணத் திட்டத்திற்கு நாளை நமதே என்று பெயரிட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி புதிய கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகக் கூறிய கமலஹாசன், ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகம் தழுவிய அளவில் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறியிருந்தார். இதற்காக, மாவட்ட வாரியாக நற்பணி மன்றத்தினரை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது வார இதழ் ஒன்றில் தொடராக எழுதி வரும் கட்டுரையில், தமது சுற்றுப் பயணத்திற்கு நாளை நமதே என்று பெயர் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய பிரதேசமாக, தமிழகத்தை மாற்றிக் காட்டுவதே தமது கனவு என்று தெரிவித்துள்ள கமல், நற்பணி மன்றங்கள் மூலம் அங்குமிங்கும் செய்து வந்த பணிகளை, தற்போது மையத்தில் நின்று மேற்கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார். முதலில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, அரசு செய்யத் தவறியதை செய்து காட்டி முன் மாதிரி கிராமமாக மாற்றுவதே தமது திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

முன்னதாக, திமுக., செயல் தலைவர் ஸ்டாலின், அண்மையில் ஓரிரு முறை தேர்தலை ஒட்டி பயணம் மேற்கொண்டார். அதில், “நமக்கு நாமே” என்ற கோஷத்தை வைத்து சுற்றுப் பயணம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img