உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பது ஊழல்கள் தொடர வழி வகுக்கும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக இரு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவு மிகவும் தவறானது; கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்தட்டுப்பாட்டை போக்கும் நோக்குடன் கடந்த 2007 ஆம் ஆண்டில் உடன்குடி மின்திட்டம் அறிவிக்கப்பட்டது. 1600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத மிகுமின் நிறுவனமும் (பெல்) இணைத்து செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், பெல் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட கூட்டாண்மை ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, ரூ.8000 கோடியில் இத்திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தும் என்று 24.02.2012 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பின் இந்த மின் நிலையத்தின் உற்பத்தித்திறன் 1320 மெகாவாட் ஆக குறைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2013 ஆம் ஆண்டில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் சுமார் 18 மாத தாமதத்திற்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட்டன. வழக்கமாக ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்ட ஓரிரு வாரங்களில் ஒப்பந்தம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் மீது 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, இப்போது ஒப்பந்த நடைமுறையையே தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.
ஒப்பந்தப்புள்ளிகள் முறையாக இல்லை என்பதால் தான் அவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்க முடியாத வாதம் ஆகும். இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 2 ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டன. இந்த நடைமுறையின் போது சீன&இந்திய கூட்டாண்மை நிறுவனங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 ஒப்பந்தப்புள்ளிகள் நிராகரிக்கப்பட்டன. இப்போது நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் குறை இருந்திருந்தால் அவற்றை அப்போதே ரத்து செய்திருக்க முடியும். ஆனால், கடந்த 6 மாதங்களாக சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களுடனும் தமிழ்நாடு மின்சார வாரியம் பேச்சு நடத்தி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் நடைபெற்ற மின்சார வாரியத்தின் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட போது ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், அடுத்த ஒரு மாதத்தில் அவசர அவசரமாக மின்வாரிய இயக்குனர்கள் கூட்டத்தை கூட்டி உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதை தமிழக அரசு மாநில மக்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும், வெளியில் தெரியாத காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மின்திட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் அந்த நிறுவனத்திற்கே வழங்க மின்துறை அமைச்சரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர்பதவியில் இருந்து, இப்போது தமிழக நிர்வாகத்தை கவனிக்கும் உயர் பதவிக்கு மாறியுள்ளவர் உள்ளிட்ட சில அதிகாரிகளும் விரும்பியுள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரியிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்க முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும், புதிதாக ஒப்பந்தம் கோரப்பட்டால், விதிகளை வளைத்து அந்நிறுவனத்திற்கு சலுகை காட்டலாம் என்பதால் தான் ஒப்பந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டதாகவும் பொதுத்தளத்தில் எழுப்பப்படும் குற்றச்சாற்றுகளை அவ்வளவு எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அமைச்சரும், அதிகாரிகளும் சலுகை காட்டத் துடிக்கும் நிறுவனத்தினால் தான் இந்த மின்திட்டப் பணிகள் தொடக்கத்தில் தடைபட்டன. அதற்குப் பிறகும் அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்க ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள் என்றால் அதற்கான காரணங்களை யூகிப்பது கடினமான ஒன்றல்ல.
2007 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இந்த மின் திட்டத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த திட்டம் முழுவட்டம் அடித்து தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்திருக்கிறது. இதற்காக இதுவரை ரூ.80 கோடி மக்கள் பணம் வீணாக செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதன்பின் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம். திட்டப்பணிகளை முடிக்க மேலும் 5 ஆண்டுகள் ஆகலாம் என்பதால், 2023 ஆம் ஆண்டுக்கு முன்பாக உடன்குடி மின் திட்டம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாய்ப்பு இல்லை. இடைப்பட்ட காலத்தில் இத்திட்டச்செலவு ரூ.8000 கோடியிலிருந்து 2 மடங்காக உயர்ந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
அதுமட்டுமின்றி, இதுபோன்ற மின்திட்டங்களை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம் வெளிச்சந்தையில் ஒரு யூனிட் ரூ.15.10 என்ற விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் தாங்கள் பெருமளவில் பயனடையலாம் என்பது தான் ஆட்சியாளர்களின் திட்டம். இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பையெல்லாம் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி நுகர்வோர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்பதே அவர்களின் எண்ணம். அடிப்படைத் தேவையான மின்சாரத்தை தங்களின் பணம் ஈட்டும் நோக்கத்திற்கான கருவியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்வதை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, உடன்குடி மின்திட்டத்தின் ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட்டு, தகுதியான நிறுவனத்திற்கு உடனடியாக ஒப்பந்தம் வழங்கி கட்டுமானப் பணிகளைத் தொடங்க தமிழக அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


