சென்னை:
மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பும் நிலையில் உள்ளது என்றும், பஸ் கட்டண குறைப்பு வரவேற்கத் தக்கது என்றும் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இந்நிலையில் உயர்த்தப்பட்ட கட்டண விகிதங்களிலிருந்து ஓரளவு குறைத்து, கட்டணக் குறைப்பை அரசு அறிவித்தது.
இந்த கட்டணக் குறைப்பு என்பது, ஒரு கண்துடைப்பு நாடகம் என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி, நாளை போராட்டங்களை நடத்தப் போவதாக எதிர்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்த பஸ் கட்டணக் குறைப்பு வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் இந்தக் குறைப்பு உயர்த்தப் பட்ட அளவுக்கு போதாது என்றும் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை, தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என கூறுவது தவறு. மத்திய அரசு ஒதுக்கும் நிதிகளை திரும்பப் பெறும் நிலையில் தமிழக அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் நிதிகளை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் தமிழக அரசு அப்படியே வைத்துள்ளது என்று கூறினார்.
Leave a Reply