கர்நாடகா காவிரியில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். பின்னர் பேசிய அவர் காவிரி பிரச்சனையில் யார் சரியாக செயல்பட்டார் என்று மோதிக் கொள்வதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து அணை கட்டுவோம் என்று கூறுவது அடாவடித்தனம். தண்ணீருக்காக தமிழ்நாடு கேரளத்திடமும், கர்நாடகத்திடமும் கையேந்தும் நிலை உள்ளது. கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்க அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.
கர்நாடகத்தில் அனைத்து கட்சியினரும் காவிரி பிரச்சனையில் ஒரே அணியாக இருக்கின்றனர். தமிழநாட்டில் திமுக கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுகவும், அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை திமுகவும் ஆதரித்தது என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர்,காவிரி பிரச்சனைக்காக நாம் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம.தோற்றுவிட்டால் அடுத்த தலைமுறை நம்மை சபிக்கும். அண்டை மாநிலத்துடன் நல்லுறவை பேணும் நேரத்தில் நமது உரிமையையும் விட்டுக்கொடுக்கக்கூடாது இவ்வாறு கூறினார். மேகதாது விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் அனைத்து கட்சியினரும் பேசி வருகின்றனர். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் இது குறித்து நிச்சயமாக வலியுறுத்துவோம் எனவும் கூறினார். மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாமக ஆதரவு தெரிவிப்பதாக ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். அதேபோல காவிரியில் தமிழ்நாட்டின்உரிமையை கர்நாடகா மெல்ல பறித்து வருகிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக காவிரி நீர் உள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது இவ்வாறு கூறினார்.
இதனை தொடர்ந்து அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




