முகம் தெரியாமல் பலர் சமூக வலைதளங்களில் பழகி பணத்தையும் இழக்கின்றனர். சமூக வலைதள மோசடிகளும் அதிகரித்திருக்கின்றன.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் என நினைத்து இன்ஸ்டாகிராமில் ஒருவருடன் சாட் செய்து வந்திருக்கிறார். மூன்று மாதங்களுக்குப் பிறகே அது தன் கணவர் இல்லை என்று தெரியவந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மும்பை தீன்தோஷி என்ற இடத்தைச் சேர்ந்த 40 வயது பெண் இன்ஸ்டாகிராமில் தன் கணவர் என்று நினைத்து ஒருவருடன் பழகிவந்தார்.
இருவரும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்துகொண்டனர். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணிடம் அவரின் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பும்படி இன்ஸ்டாகிராமில் பேசிய நபர் கேட்டுள்ளார்.
கணவர்தானே கேட்கிறார் என்று நினைத்து அந்தப் பெண்ணும் தனது அந்தரங்கப் புகைப்படங்கள் சிலவற்றை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த நபர் மேலும் அதிகமான அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்போது அந்தப் பெண் அனுப்ப மறுத்தபோது தன்னிடம் இருக்கும் அந்தரங்கப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
உடனே அந்தப் பெண் தன் கணவரிடம் நேரடியாக இது குறித்துக் கேட்டு சண்டையிட்டுள்ளார். அதன் பிறகுதான் தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பேசியது தன்னுடைய கணவர் இல்லை என்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்தத் தம்பதி இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியது அதே கட்டிடத்தில் வசிக்கும் 20 வயது இளைஞர் என்று தெரியவந்தது.
அந்த இளைஞருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நவராத்திரி விழாவில் ஏற்பட்ட பிரச்னையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே அதற்குப் பழிவாங்க அந்தப் பெண்ணின் கணவர் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு திறந்து, அவரிடம் சாட்டிங் செய்துள்ளார்.
அந்தப் பெண்ணின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அந்தப் பெண்ணின் புரொஃபைல் போட்டோவைத் திருடி, தனது புரொஃபைலில் வைத்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணும் நம்பியுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவரை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.