நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகிறது.
2021-22ம் கல்வியாண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருப்பதால், மாநிலங்கள் தோறும் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான தெலுங்கானாவில் காலை 7.30 மணி முதல் மதியம் வரை மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதே போல ஒடிஸா மாநிலத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பள்ளிகளை மூட வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அரை நாள் மட்டும் வகுப்புகளை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது, சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பில், தினமும் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.