காதலித்த இரு இளம்பெண்களில் ஒருவர் ஆணாக மாற ஆப்ரேஷன் செய்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதற்காக சென்னை சென்ற அவர்களை போலீசார் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர் முறையே பெரம்பலூர் தனியார் கல்லூரிகளில் பி.ஏ ஆங்கிலம், மற்றும், பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகின்றனர். இவர்கள் ஏப்5 ம்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற இரு மாணவிகளும் மாலை நீணட நேரமாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடி பார்த்தனர். கிடைக்காததால், பெரம்பலூர் போலீசில் இரு மாணவிகளின் பெற்றோர்களும் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அவர்களின் செல்போனை ஆய்வு செய்த போது, லாடபுரத்தில் உள்ள மாணவன் ஒருவரிடம் கொடுத்து விட்டு அவனது செல்போனை வாங்கி சென்றிருப்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காணாமல் போன இரு மாணவிகளும் குரும்பலூர் அரசு பள்ளியில் 6ம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வந்த நெருங்கிய தோழிகள் எனவும் தற்போது பெரம்பலூர் கல்லூரிகளில் இருவரும் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 5ம் தேதி காலை கல்லூரிப் பேருந்தில் ஏறி கல்லூரி செல்வதாக சென்ற மாணவிகள், கல்லூரிக்கு செல்லாமல் வேறு எங்கோ சென்று விட்டனர் என்பது தெரியவந்தது.
விசாரணையில் அதில் ஒரு பெண்ணுக்கு, பெண்களுக்குரிய குணாதிசயங்கள் இல்லாமல் ஆண்கள் போல் இருப்பதும் கையில் காப்பு போடுவதும் பூ, பொட்டு வைக்காமலும், ஆண்கள் அணிகின்ற செருப்பு அணிவதும், தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
செல்போனை ஆராய்ந்ததில் அதிலிருந்த புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது காணாமல் போன மாணவிகள் இருவரும் சென்னை போரூர் ஓம்சக்தி நகரில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதும் காணாமல் போன மாணவிகள் ஆண்களாக மாறுவதற்காக சென்னை வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் நேற்று மாலை ஒரு மாணவி ஆணாக மாறும் ஆப்ரேஷன் செய்ய இருந்த நிலையில் போலீசார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். சென்னையிலிருந்து 2 மாணவிகளையும் மீட்டு இன்று பெரம்பலூரில் அவர்களது பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேலும் போலீசார் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பால் காதல் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் ஒருவர் ஆணாக மாறி மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தும் தெரியவந்தது. இதனால் இச்சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





