கடந்த காலங்களில் தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளதாவது,
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும், பராமரிப்பு பணிகள் செய்வதற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு அத்துமால் கல் போடப்பட்டுள்ளது. பழநியில் இரண்டு ஆண்டுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும்.
திமுக ஆட்சிக்கு வந்த 10 மாதத்தில் ரூ.2,500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்ட 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் டில்லியில் வைக்கப்பட்டுள்ளது. அவை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும். மீட்கப்பட்ட சிலைகளை எப்படி பாதுகாப்பது என்பது குறித்து விரைவில் முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அன்னை தமிழ் அர்ச்சனை மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது பல கோயில்களில் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.





