தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டணப்பிரவேசம் நடைபெற்று வருகிறது.பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே வசித்து வருபவர்கள்.
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்வாகும்.பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து மனமுவந்து சுமந்துவருவது ஒரு ஆன்மிக நிகழ்வாக உள்ளதால் இதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. மதம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை கூடாது.மனிதனை மனிதன் இழுத்து கூலி வாங்குவதே தவறு, இது கூலி வாங்கும் நிகழ்வல்ல; தாய், தந்தைக்கு சேவை செய்வது போன்றது என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் சட்டசபையில் பேசினார்.
இந்த நிலையில் பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் ஆதீனங்களுடன் பேசி முதல்வர் நல்ல முடிவெடுப்பார்.
சிலர் இந்த விவகாரத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள்.என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதிலளித்து பேசினார்.தருமபுர பட்டின பிரவேச விவகாரத்தில் தமிழக அரசு நடுநிலையோடு செயல்படும்.
ஆதீனங்களை அழைத்து ஆலோசனை பெற்றவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றார் அமைச்சர் சேகர்பாபு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம் தமிழ்நாட்டின் பழமையான சைவ மடங்களில் ஒன்று. 16-ம் நூற்றாண்டில் இருந்து செயல்படுவது. ஆண்டு தோறும் இந்த ஆதீன குரு முதல்வரின் குருபூஜை தினத்தில் பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் ஆதீன மடாதிபதியை பல்லக்கில் அமர்த்தி, ஆதீன சீடர்கள் மற்றும் பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.
தருமபுர ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் 2019 டிசம்பர் 4 ம் தேதி காலமானார்.
அதைத் தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பொறுப்பேற்றார். அன்றே ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமந்து பட்டினப் பிரவேசம் நடந்தது.
இதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இதுதொடர்பாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கடந்த 2020ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், தருமபுர மடத்துக்குப் புதிய ஆதீனகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட – மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் ‘மனித உரிமையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார், என்று கூறி அதை எதிர்த்தார்.
கடந்த ஆண்டு திருவாவாடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற பட்டினப் பிரவேச நிகழ்வு திராவிடர் கழகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி நடைபெற்றது. திருவாவாடுதுறை ஆதீனகர்த்தர் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா சென்றார்
இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பட்டினப் பிரவேச நிகழ்வும் மீண்டும் இம்மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்குத் தடை கோரி திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவின்படியும், மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி திராவிடர் கழகம் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி பட்டினப் பிரவேச நிகழ்வில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் கோட்டாட்சியர் பாலாஜி.
இந்த தடை உத்தரவை எதிர்த்தும், பல்லக்கில் சுமக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தியும் ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
“காலம் காலமாக நடைபெறும் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி குருவுக்கு நாங்கள் அளிக்கும் மரியாதை. அதை மாற்றக்கூடாது,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த தடையை மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எதிர்த்துப் பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் மே 3ம் தேதி செவ்வாய்க்கிழமை பேசிய மதுரை ஆதீனகர்த்தர், “சைவத்தையும், தமிழையும் பாதுகாக்கும் தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்ச்சி 500ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரியம். கவர்னர் வருகை விவகாரம்தான் பட்டின பிரவேச நிகழ்ச்சி ரத்துக்கு காரணம்.
ஆங்கிலேயர் ஆட்சியிலும், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும்கூட இது நடந்தது. தற்போது தடை விதிக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாடு முதல்வர் ரகசிய காப்பு பிரமானம் எடுக்கிறார். அதை எடுக்கக்கூடாது என்று எப்படி சொல்லக்கூடாதோ அப்படித்தான் இந்த பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்துப் பேசிய மதுரை ஆதீனகர்த்தர், திருஞானசம்பந்தர் பல்லக்கை திருநாவுக்கரசர் சுமந்தார். உயிரைக் கொடுத்தாவது எனது குருவான தருமபுர ஆதீன பட்டின பிரவேசத்தை நடத்துவோம். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும். அதனை முதல்வரே நேரில் வந்து நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். உயிரே போனாலும் பரவாயில்லை என்றார்.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.இன்று இப் பிரச்சினை சட்டசபையில் எதிரொலித்தது.அதிமுக,பாஜக,பாமக இந்த தடையை நீக்க வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.





